Monday, November 23, 2020

அறிவுடையார் எல்லாம் உடையார்- பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப்பேச்சு 

 அவையோருக்குவணக்கம் 

பூமியில் உயிர்கள் கோடானுகோடி வகையினவாய் உள்ளன. அவற்றுள் ஆறாம்
அறிவைப் பெற்றவன் மனிதன்.
இந்த அறிவால் நிலவை அடைந்தான். 
கிரகங்களை ஆராய்கிறான்.
ஆழ்கடலின் தரை தொட்டு அதிசயங்கள் தேடுகிறான்.
திசைகளை அளந்து திக்கெட்டும் பறக்கிறான்.
உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டான்.
இத்தகு அறிவைப் பெற்றதால் மனிதன் எல்லாம் பெற்றவன் ஆகிவிட்டானா?
கொக்கி போட்டுப் பதிலை இழுத்துப் பார்ப்போம்.
என்னிடத்தில் இல்லாத பொருளே இல்லை என்று எண்ண இயல்பவன் எவனோ;
அவனே எல்லாம் உடையவன்.
தன்  தேவைகள் அனைத்தும் நிறையப் பெற்று மனதில் திருப்தி கொள்பவனே
எல்லாம் உடையவன்.
இல்லை என்ற ஏழ்மை இல்லாத பெருமனம் எவனிடம் உள்ளதோ; அவனே
எல்லாம் உடையவன். 
சரித்திரப் பாடத்தின் சாரமெல்லாம் சத்தோடு புரிந்து கொள்வது முற்றிய அறிவா?  
பூகோளத்தில் பூட்டிக்கிடக்கும் உண்மைகளைத் திறப்பது பூர்ண அறிவா?
அறிவியல் அளிக்கும் ஆழ்ந்த உண்மைகள் தான் அப்பட்டமான அறிவா?
கணிதச் சிக்கல்களைச் சீராக விடுவித்துக் காண்போர் வியக்கும் வண்ணம் மேன்மை
பெறுவதை கச்சிதமான அறிவு என்று சொல்லலாமா?  
இலக்கியங்கள் எல்லாம் பயின்று இன்பவுலகில் உன்னதங்களை உன்னிப்பாகப் புரிந்து
கொள்வது உண்மை அறிவா?
இப்படி எத்தனையோ துறைகள் நாளுக்குநாள் பெருகிப் பல்கிப் புதுமைகள்
படைக்கின்றன. இவற்றுள் எந்த அறிவு எல்லாம் உடையவராக நம்மை மாற்றும்? 
பெயருக்குப் பின்னால் பல பட்டங்களை நீட்டிப் படித்தவன் ஆனவுடன் ‘எல்லாம்
நம்மிடம் இருக்கிறது’ என்ற திருப்தி ஏற்படுகிறதா? ………………இல்லை. 
அணுவைத் துளைத்தாலும் ஆண்டவனை அறிந்து கொள்பவன் தான் மனதில்
நிறைவைக் காண்பான். 
உயர உயரப் பறந்தாலும் அயராத உழைப்புக்கு ஆண்டவனே துணை என்று
அறிந்தவன் மனதில்தான் திருப்தி ஏற்படுகிறது.
மாளிகை வாசமும், மதிமயக்கும் இன்பமும் நிலையற்ற நிறைவையே அளிக்கும்
என்ற அனுபவ மெய்யறிவு யாரிடம் உள்ளதோ அவரே எல்லாம் உடையவராகக்
காணப்படுகிறார்.
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கிய நாயன்மார் ‘எல்லாம் உடையவரா’கத்
தான்  தம்மை எண்ணினார். மக்களும் அவரை எல்லாம் உடையவராகவே
மதித்தனர்.
ஆகவே அறிவு என்பது; கலை அறிவோ; கல்வி அறிவோ; அறிவியல் அறிவோ;
இலக்கிய அறிவோ; வாழ்க்கை அனுபவ அறிவோ அன்று. அது இறையுணர்வு
டைய மெய்யறிவு ஆகும்.
மெய்யறிவுடையார் எல்லாம் உடையார் எனல் தகும்.

    நன்றி
வணக்கம்

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி- பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப்பேச்சு

 ஆன்றமைந்த அவையோர் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

பிறவிகளுள் உயர்ந்தது மனிதப்பிறவி.
                                        ”அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”
என்று பாடினார் ஒளவைப்பிராட்டியார். 
மனிதராய்ப் பிறந்த நாம் இப்பிறவியின்  மேன்மையை அறிகின்றோமா?
இல்லை.
மனிதப் பண்புகளைக் கெடுத்து வாழ்கின்றோம். அக்கேட்டிற்குத் துணை செய்யும்
கருவிகளுள் ஒன்று சினம்.
சினம் ஏற்படும் போது மனிதனின் மென்மைப் பண்புகளும், மேன்மைப் பண்புகளும்
அழிகின்றன. இதனால் தான் வள்ளுவர்
                                                    ”தன்னையே கொல்லும் சினம்”
என்கிறார். சினம்; 
கொலைக்குப் பயன்படும் ஆயுதம்.   
குடும்பப்பிளவுகளுக்குக் காரணம். 
அறிவு இழக்கச் செய்யும்.
 அவசர புத்தியைக் கொடுக்கும். 
விலங்குகளுக்குச் சினம் ஏற்பட்டால் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும்
அழிகின்றன. யானையின் சினம் பாரதியை வாழவிடவில்லை. அவர் ஒவ்வொரு
நாளும் கோயில் யானைக்கு உணவு அளித்தார். ஆனால் ஒருநாள் மதம் பிடித்துச் சினம்
கொண்ட யானை தனக்கு உணவளித்தவர் என்றும் பாராது அவரைத் துதிக்கையில்
வளைத்துக் கீழே தள்ளியது. பாரதியின் இறப்புக்குக் காரணமாய் அமைந்தது.
ஹிட்லரின் சினம் அவரையும் அழித்தது; அவர் தேசத்தையும் அழித்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கள்வன் என்று கருதிய போது,
                                        ”கொன்றச் சிலம்பு கொணர்க“
என்று ஆராயாமல் சொல்ல வைத்தது சினம். 
தன் தேவியின் சிலம்பைத் திருடியவன் மீது கொண்ட சினம்- 
தன் தேவி தன்மேல் கொண்ட சினத்தைத் தணிக்க மேற்கொண்ட அவசரம்-
அனைத்தும் சேர்ந்து ஒரு பத்தினியைப் பதைத்து எழ வைத்தது.
பாண்டியன் அழிவுக்குக் காரணம் ஆனது. 
அவன் மனைவி உயிருக்கும் உலை வைத்தது. 
ஒரு மாநகரின் அழிவுக்கு அடிப்படை ஆனது.
 மாறாத பழியைப் பாண்டியன் குலத்திற்கு ஏற்படுத்தியது.
ராமாயணத்தில் மிகுந்த வலிமை பெற்றவன் எனப் புகழ் பெற்ற ராவணன் தன்னை
இடித்துரைத்த அத்தனை பேரிடமும் சீற்றம் கொண்டான்.
தம்பியர் கூறிய அறிவுரையைச் சினத்தோடு மறுத்தான். விளைவு? 
இலங்கை அழிந்தது. 
அரக்கர் குலம் அழிந்தது. 
ராவணன் தான் அழிந்தான். 
தன் சுற்றம் முழுதும் அழியக் காரணம் ஆகிவிட்டான்.
இவ்வாறு சினம் விளைவிக்கும் கேடுகளை வரலாற்றிலும், கதைகளிலும்
காணலாம். அதனால் தான் வள்ளுவர்,
        ”சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் 
        ஏமப் புணையைச் சுடும் “ என்று பாடியுள்ளார்.
                                                                     நன்றி
                                                                    வணக்கம். 

பள்ளியில் உனக்குப் பிடித்த விழா- பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப்பேச்சு 

 எல்லோருக்கும் அன்பின் வணக்கம்.

எங்கள் பள்ளியில் எத்தனையோ விழாக்கள் .
சுதந்திர தின விழா 
குடியரசு தின விழா 
குழந்தைகள் தின விழா 
ஆசியர் தின விழா 
ஆண்டுவிழா ...........................எனப் பலப்பல. 
இவற்றுள் எனக்குப் பிடித்த விழா -
                                                               குழந்தைகள் தின விழா- நவம்பர்-15 
அன்று பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களை அடிப்பதே கிடையாது.
வழக்கமான சீருடைகளை விடுத்து; வண்ண வண்ண உடைகளை அணியலாம்.
பள்ளியில் எங்களுக்காக அன்று இனிப்பும் வழங்குவார்கள்.
வகுப்பே நடக்காது;அதுதான் பெரிய சிறப்பு; 
அதனால் மறுநாளைக்கு வீட்டுப்பாடமும் கிடையாது.
வீட்டிற்குப் போன பின்னரும் விளையாடலாம்;
அம்மாவோடு கதை பேசி மகிழலாம்.
அக்கா/ அண்ணன்/ தம்பி/ தங்கையோடு பொழுது போக்கலாம்.
மொத்தத்தில் குழந்தைகளாகிய நாங்கள் அனைவரும்;
எந்த ஒரு மனக்குறையும் இல்லாமல் நிறைவுடன்
                                                            தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். 
எல்லா மாணவருக்கும் சேர்த்து ஒரு கூட்டம் நடக்கும்.
கூட்டத்தில் பாட்டு, நடனம், நாடகம் என முழுக்க முழுக்க கொண்டாட்டம் தான்.
நாங்கள் ஆடுவோம்; பாடுவோம்; நாடகங்கள் நடிப்போம்;
மாறுவேடமும் போட்டு மகிழ்வோம்.
இந்தக் கலை நிகழ்ச்சிக்காக பத்து நாட்களுக்கு முன்னரே ஒத்திகை, பயிற்சி எனத்
                                                                                                       தடபுடலாக நேரம் போகும். 
இத்தனை இன்பத்தை அள்ளித் தரும் குழந்தைகள் தின விழாவை;
நிரந்தரமாக ஏற்பாடு செய்து கொடுத்த நேரு மாமாவை;
இப்போது மிகுந்த மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
ஆம்;
அவரது பிறந்தநாள் தானே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வெள்ளைக் கோட்டும் சூட்டும் அணிந்து; 
மார்பில் ஒற்றை ரோஜாவைக் குத்திக் கொண்டு;
‘பாரத ரத்னா’ என்ற பட்டத்திற்குரியவராய்; 
நம் சுதந்திரத் திரு நாட்டின் முதல் பிரதமமந்திரியாய்ப் பதவியேற்ற;
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை...
நாட்டு மக்கள் எப்படிக் கொண்டாட வேண்டும் என்று;
அவரே வரையறுத்துக் கொடுத்தார்.
குழந்தைகள் மேல் அவர் கொண்ட பிரியம் தான்...
அவரை மாமா என்று அழைக்க வைத்தது.
பாரத தேசமெங்கும் உள்ள குழந்தைகளுக்கு ஒரு அடையாளமும் அங்கீகாரமும்
கிடைத்தது; ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளால் தான் எனில் மிகை ஆகாது.
அவரது பிறந்தநாளில் நாம் செய்ய வேண்டிய பணியையும் சிந்திக்க வைக்கிறது
இக்கொண்டாட்டம். 
அடிப்படைத் தேவைகளைப் பெற இயலாமல்;
படிக்க வேண்டிய வயதில் உழைக்கச் செல்லும் குழந்தைகள் எல்லோருக்கும்
சமச்சீரான கல்வியைக் கொடுக்கும் சமுதாயமாக...
நம்நாடு உருவாக நாம் துணை நிற்போம்;
ஒன்று கூடுவோம்;
மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
                                                                    நன்றி
                                                                வணக்கம்.  

என் எதிர்காலத் திட்டம்- பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப்பேச்சு 

 அனைவருக்கும் அன்பு வணக்கம்

பெற்றோர் போடும் சோற்றில் வாழும் வாழ்க்கை மாறிப் பிள்ளையாய்ப் பிறந்த
அனைவரும் தத்தம் கால்களில்  நிற்கும் காலம் ஒன்று வரும்.

அப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன்? இது தான் கேள்வி.
மருத்துவராகவோ/
பொறியாளராகவோ/
சிலிகான் பள்ளத்தாக்கின் பெருங்கூட்டத்தில் ஒருவனாகவோ
வாழ எனக்கு விருப்பமில்லை.
ஒரு அரசியல் சீர்திருத்தவாதியாக வாழ ஆசைப்படுகிறேன் நான். 
கோடிகோடியாய்ப் பணம் தேடிக்குவித்து கொள்கையற்று வாழ நினைக்க வில்லை நான். மாடிமாடியாய் வீடுகட்டி மகிழ்ந்து மமதையில் திளைக்க மனம்  இல்லை எனக்கு. 
என்னுடைய கனவு ஒரு உன்னதமான அரசியல்வாதி ஆகவேண்டும் என்பதே.
அலங்காரப் பந்தல்…………………… ஆளுயரப் போஸ்டர்
அசுர அளவில் கட்டவுட்……………. அயல்நாட்டில் ஆரோக்கியம் 
கறுப்புப் பூனைப் பாதுகாப்பு ……….. கால் வைக்கப் பூத்தூவல்
சாரிசாரியாய்க் கார்கள்……………....பறக்கும் பலூனில் பளபளக்கும் பெயர்,           
மேடையேற மலர்க்கொத்து …….....மேலை நாட்டு உடை 
 உட்காரச் சிம்மாசனம்………………. உலகம் வியக்கும் ஊர்கோலம் 
தங்கத்தால் கிரீடம் …………………...வைரத்தால் வாள் 
எதுவும் எதிர்பார்க்காத அரசியல்வாதியாக நான் இருப்பேன்.
என் தலைமையில்; 
நாடு முழுமைக்கும் ஒரே கல்வித்திட்டம்;
வேளாண்மைக்கே முதலிடம்;
நதிகள் எல்லாம் நாட்டுடைமை; 
சாதி மத வேறுபாடின்றி ஒரே சட்டம்;
பொருளாதார ஏற்றத் தாழ்வின்றி சமச்சீரான மருத்துவம்;
குளறுபடி இல்லாத கூலிமுறை;
உடல் உழைப்பிற்கு ஏற்றமிகு மதிப்பு 
எல்லா மாநிலத்திற்கும் மும்மொழித் திட்டம் 
மரபிற்கும், இயற்கைக்கும் பாதுகாப்பு
என குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு பயணப்படுவேன்.   
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனும் மனம் பெறுவேன்.
வறுமை ஒழிப்பை வாழ்வின் லட்சியமாய்க் கொள்வேன்.
சிறுமை கண்டால் சீறி எழவும் தயங்க மாட்டேன்.
பொறுமை மிகுந்து பூசல் பலவும் தீர்ப்பேன்.
எருமை போலச் சோம்பித் திரிவோர்க்கு;
                                                                எறும்பு போலாகிச்  சுறுசுறுப்பை ஊட்டுவேன்.
எத்தர்களாய் வாழ்வோரை இனம்கண்டு தேய்ப்பேன்.
உத்தமராய் வாழ உலகோர்க்கு வழி காட்டுவேன்.
எளிமைக்கே ஏற்றம் அளித்து இதயம் மகிழ்வேன்.
பினாமியில் சொத்து சேர்த்துப் பெருந்தொழில் புரிய மாட்டேன்.
சத்தியம், அகிம்சை இவையெல்லாம் சொல்லளவில் இல்லாமல்;
                                                செயல்படுத்திக் காட்டும் கர்மவீரனாக நான் திகழ்வேன்.
நம்நாட்டு அரசியலைச் சாக்கடை என்ற நிலையிலிருந்து;
சந்தனமாய் மாற்றித்;
தலைசிறந்த குடிமகனாய் வாழ்ந்து;
அரசியல் சீர்திருத்தவாதியாகத் திகழ்வதே
                                                என் எதிர்கால லட்சியம் ஆகும்.
                                                                        நன்றி
                                                                    வணக்கம். 

நான் ஆசிரியரானால்… பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப்பேச்சு 

 என் அன்பின்  ஆசிரியர்க்கு முதல் வணக்கம் 

நான் ஆசிரியரானால்...
தாய் மண்ணின் வருங்கால வாரிசுகளை உருவாக்கும் பொறுப்பைத்
திறம்பட ஏற்று நடத்துவேன்.
செய்யும் தொழிலே தெய்வம் என்னும் பொன்மொழிக்கேற்ப;
அத் தொழிலைப் புனிதமானதாகக் கருதிச் செயலாற்றுவேன்.
கண் போன்ற கல்வியை மாணவர் உலகம் முழுவதும்;
சாதிமத வேறுபாடின்றிப் பெற்றிட வழிவகை செய்வேன்.
நம் இதிகாசங்கள் காட்டும் துரோணாச்சாரியார் போலவோ;
                                                   பரசுராமர் போலவோ
பிறப்பால் உயர்வு,தாழ்வு பாராட்ட மாட்டேன்.
ஏற்றத் தாழ்வின்றிக் கல்வியை எல்லோரும் பெறும் வண்ணம்
திட்டங்கள் தீட்டுவதோடு மட்டுமின்றி; அவற்றைச் செயலிலும் காட்டுவேன்.
காசுக்குக் கலை வாங்கும் நிலை போல;
காசுக்குக் கல்வியை வாங்கும் நிலை இன்றைய சமுதாயத்தில் பெருகியுள்ளது.
இந்த அவலம் அபாயகரமானது.
முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டிய நச்சு.
நான் ஆசிரியரானால் கல்வித்துறையின் மேலிடத்தோடு;
இந்நிலை நீங்கப் போராடுவேன்.
ஆங்கிலேயர் வகுத்த கல்வித்திட்டத்தால் இருநூறு ஆண்டுகளாக; 
எழுத்தர்களை உருவாக்கிய அவலநிலை
இன்னும் நம் நாட்டை விட்டு நீங்கவில்லை.
கல்வித்திட்டம் மாறி;
கற்றவர் தரம் ஓங்க;
பள்ளிக்கூடம் முதல் மாணவர்க்குத் தொழிற்கல்வி பயிற்றுவிக்க...
வழிவகை செய்வேன்.
தலைசிறந்த ஆசிரியர்; மாணவர் உள்ளம் கவர்ந்த உத்தமராகத் திகழ்வார்.
மாணவர் மனம் கவர;
அவர்கள் மனம் போன போக்கில் கல்வியைத் தவிர்ப்பது தக்கது அல்ல.
வேம்பும் கடுவும் கசந்தாலும் மருந்தாய் அமைவது போல;
மாணவர்களைக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட அன்பில் நெறிப்படுத்துவேன்.
கல்வி வளாகத்திற்குள்...
மாணவர்க்குப் பெற்றோர் போன்ற உறவு நிலையை உருவாக்கிக் கொள்வேன்
பொதி சுமக்கும் கழுதைகள் போல்;
மாணவரைப் புத்தகச்சுமை தூக்க வைக்காமல்;
அறிவுச் சுமையை அவர்கள் சிந்தையில் ஏற்றுவேன்.
மனப்பாடத் திறனைப் பெருக்குவதே தலையாய கடன் என்று கருதாமல்;
சிந்திக்கத் தூண்டுவதும்;
அறிவைப் பெருக்குவதுமே கல்வியின் நோக்கம்...
என்ற கொள்கையோடு பணி புரிவேன்.
கூடுதல் மதிப்பெண் பெறுவதே குறைவற்ற கல்வி...
என்ற தவறான கொள்கை பரவிவரும் இக்காலத்தில்;
மதிப்பெண்கள் அறிவுத் திறனுக்குரிய அளவுகோலாய் அமைவதில்லை...
என்பதைப் புரிந்து செயல்படுவேன்.
பிறர்க்கும் புரிய வைப்பேன்.
புத்தகப் புழுக்களாய் மாணவரை மாற்றாமல்;
செயல் திறன் மிக்கவர்களாய் உருவாக்க;
அவர்களது முழுமையான ஆளுமையை மேலோங்க வைப்பேன்.  
ஆசிரியத் தொழில் என்றாலே; சம்பள உயர்வு கேட்கும் சாரமற்ற தொழில்...
என்ற தவறான கருத்து நிலவுகிறது.
அதை மாற்றி அத்தொழிலின்  புனிதத்துவத்தை நிலைநாட்டுவேன்.
                                            ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’
என்ற கொள்கையோடு;
செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதி;
உன்னதமான ஆசிரியர் என்று பெயரெடுக்க முற்படுவேன்.
                                                                     நன்றி
                                                                  வணக்கம்

நான் கவிஞரானால்… பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப்பேச்சு

                                                                         வணக்கம். 

நான் கவிஞரானால் …என்ன செய்வேன்?
பாட்டுக்கொரு புலவன் பாரதி போலப் பாமழை பொழிவேன்.
புரட்சிக்குயில் பாரதிதாசனாய் புதுமைக் கவிதைகள் பல படைப்பேன்.
காசுக்குப் பாடும் கவிஞராய் மீசை முறுக்கும் பொய்க்கூட்டத்தில்
                                           நான் சேரமாட்டேன்.
தேசத்தின் தேவையை எண்ணாமல் வேஷம் போடுவது வீண் வேலை அல்லவா! 
பொய்யும், களவும், புனைசுருட்டும் மலிந்து கிடக்கும் இச்சமுதாயத்தில்
மெய்மை ஒளிவீச என் கவிதைகள் தூண்டுகோல்கள்.
உள்ளொன்றும் வெளியொன்றுமாய் பேசித் திரிந்து;
வீண் வார்த்தைக் கோபுரங்கள் கட்டி முடிக்கும் அரசியல்வாதிகளுக்கு;
என் கவிதைச் சொற்களே சரித்திரம் படைக்கும் சாட்டையடிகள்.
வெள்ளம் போல் பாய வேண்டிய செல்வம் பள்ளத்து நீர் போல் ஒதுங்கி நின்று;
ஒருவர்க்கே துணை செய்யும் அவலத்தை நம் நாட்டில் பரவலாகக் காண்கிறோம்.
என் கவிதைகள் அணையிட்டுத் தேக்கி வைத்த பொருளை;
அனைவர்க்கும் கிடைக்கச் செய்யும் திறவுகோல்கள்.
ஆற்றுப் பெருக்கின்றி அடிசுட்டு வறண்டாலும்;
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் வையைநதி;
அதுபோல் செல்வமும் வளமும் எனைச் சேர மறந்தாலும்;
                                                                       மறுத்தாலும் உள்ளதைக் கொண்டு வாழ்ந்து;
உலகோர்க்கு நல்வழி காட்டுவேன்.
                                            “நமக்குத் தொழில் கவிதை”
என்ற பாரதியின் பாரம்பரியத்தில் சேர்ந்துவிடத் துடிக்கும் நான்;
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்னும் கொள்கை உடையவன்.
காசுக்குப் பாடும் கவிஞனாகி; என் எழுத்தை விலைபேச மாட்டேன்.
உண்மை ஊற்றெடுக்கும் உள்ள எழுச்சியையே கவிதை ஆக்குவேன்.
உழைக்கும் வர்க்கத்திற்கு ஊக்கமளிக்கும் இதமான படைப்புகளாய்;
                                               என் கவிதை பிறக்கும்.
என் கவிதை இந்த சமூகத்து இருட்டுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
        ஆனால் எந்த ஒரு பிஞ்சையும் இருட்டுக்கு இழுத்துச் செல்லாது.
என் எழுத்து விடியலைக் காணத் துடிக்கும் பூமனங்களுக்குப்
                                                                                 பூபாள ராகம் இசைக்கும்.
        ஆனால் எந்த ஒரு அந்திச் சாயலுக்கும் அடி பணியாது.
என் சொற்கள் கதிரவன் ஒளியாய்க் கலக்கம் நீக்கும்.
        அன்றியும் காற்றோடு கரைந்து போய் சமுதாயத்தையே கறைப் படுத்தாது.
என் பணிக்கு வேலைநிறுத்தம் இல்லை. 
            என் பயணத்தில் மாணவருக்கும், ஆசிரியருக்கும் சமமாகவே இடம் கொடுப்பேன்.
முதலாளியோ; தொழிலாளியோ இருவர்க்கும் செவி சாய்ப்பேன். 
ஆண்களோ; பெண்களோ அனைவரையும் சரிநிகர் சமானமாகவே எண்ணுவேன்.
கண்மூடிப் பழக்கங்கள்
பொருளற்ற சடங்குகள்
சக்கையான சம்பிரதாயங்கள்
ஊனமுற்ற கொள்கைகள்
ஊட்டமில்லா வழக்கங்கள்
அனைத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டுவேன்.
எளிய சொல், எளிய சந்தம், எளிய நடை முதலியவற்றால்
எவர்க்கும் புரியும் வண்ணம் ஏற்றம் மிகு கருத்துகளைப் பாடுவேன்.
’என் கடன் பணி செய்து கிடப்பதே‘ என்னும் லட்சியத்துடன் செயல்படுவேன்.
    நன்றி.
வணக்கம்